Published : 27 May 2025 05:57 PM
Last Updated : 27 May 2025 05:57 PM
சிவகாசி: நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு என்றாலே அனைவரது நினைவுக்குக் வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதிகளில் நிலவிய வறட்சி காரணமாக மாற்று தொழிலை உருவாக்குவதற்காக சிவகாசியை சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்று தீப்பெட்டி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு, 1923-ம் ஆண்டு சிவகாசியில் தீப்பெட்டி தொழிலை தொடங்கினர். தீப்பெட்டி தொழிலின் நீட்சியாக பட்டாசு தொழில் தொடங்கப்பட்டது. மத்தாப்பூ, ஓலை வெடி, சிட்டு புட்டு ரக பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட தற்போது சிவகாசியில் 300-க்கும் மேற்பட்ட வகைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது.
பட்டாசு தொழிலில் இயந்திரம் பயன்படுத்தப்படாமல் முழுவதும் மனிதனின் கைகளால் உற்பத்தி செய்யபடுகிறது. தற்போது சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்தியாவில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில் 90 சதவீதத்திற்கும் மேல் சிவகாசியில்தான் உள்ளது.
பட்டாசு தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 80 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்து உள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலையில், பட்டாசு ஏற்றுமதி மற்றும் பட்டாசுகளை கப்பலில் கொண்டு செல்வதற்கான அனுமதி இல்லாததால் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டு அலுவலகத்தில் உற்பத்தி பொருட்கள் பிரிவின் கீழ் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க முழுவதும் கைகளால் உற்பத்தி செய்யப்படும் சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு உள்ளது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சம்பா வத்தலுக்கு அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தில் அடையாளமான சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து உள்ளது தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டான்பாமா தலைவர் சோனி ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் கணேசன் கூறுகையில், “சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் முன்னுரிமை கிடைக்கும். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகி சீன பட்டாசுகள் ஒழிக்கப்பட்டு, சிவகாசி பட்டாசுக்கு சந்தையில் மதிப்பு மேலும் உயரும். மேலும் பட்டாசு தொழிலின் பாதுகாப்பு மற்றும் தரம் அதிகரிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT