Last Updated : 17 May, 2025 03:57 PM

1  

Published : 17 May 2025 03:57 PM
Last Updated : 17 May 2025 03:57 PM

பொதுத் தேர்வுகளில் சாதிக்கும் கோவை சிறைக் கைதிகள்!

கோப்புப் படம்

கோவை: கல்வி கற்பதில் கவனம் செலுத்தி பொதுத்தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மத்திய சிறைக் கைதிகள் சாதித்து வருகின்றனர்.

சிறைச்சாலைகள் என்பது சித்ரவதைக் கூடங்கள் அல்ல. கைதிகள் தங்களது தவறை உணர்ந்து, திருந்தி வெளி வர தங்களை மாற்றிக் கொள்ளும் இடமாகும். சிறைகளில் கைதிகளுக்கு கல்வி கற்பித்தல், வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் தொழில்களை கற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புக் கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொழில்கள் கற்றுத்தருவது போல, கல்வி கற்றுத் தருவதற்கும் சிறைத்துறை நிர்வாகத்தினரால் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் கல்வி கற்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பொதுத் தேர்வுகளில் தேர்வு எழுதும் அனைத்து கைதிகளும் தேர்ச்சியடைந்து நூறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடைந்து வருகின்றனர்.

கோவை மத்திய சிறை கல்விக்கூட முதுநிலை ஆசிரியர் சக்திவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “கையெழுத்து கூட போடத்தெரியாமல், அடிப்படை கல்வியறிவுக் கூட இல்லாமல் விசாரணைக் கைதியாகவோ, தண்டனைக் கைதியாகவோ உள்ளே வரும் கைதிகளுக்கு கல்வியை போதித்து, அவர்களை கல்வியறிவு பெற்றவர்களாக வெளியே அனுப்பும் பணி முன்னெடுக்கப்படுகிறது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 5 ஆசிரியர்கள் உள்ளனர். 350-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை கல்விக்கூடத்தில் கல்வி கற்கின்றனர்.

சிறைக்கு வரும் கைதிகளில் கையெழுத்து கூட போடத் தெரியாமல் உள்ள கைதிகள் யார், பள்ளிக்கல்வியை இடைநின்ற கைதிகள் யார், தொடர்ந்து கல்வி கற்க ஆர்வம் உள்ள கைதிகள் யார் என வகைப்படுத்துவோம். ஆர்வத்தின் அடிப்படையில் வரும் கைதிகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கிறோம். அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்துகிறோம். சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், வயது வந்தோர் கல்வித்திட்டம் போன்ற திட்டங்களின் அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 12 ஆயிரம் நூல்கள் கொண்ட பிரமாண்ட நூலகமும் இங்குள்ளது. இவற்றையும் கைதிகள் பயன்படுத்துகின்றனர்” என்றார்.

கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, “கோவை மத்திய சிறையில், சிறைவாசிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில், கல்வியறிவு கற்பிப்பது முக்கியமானதாகும். சிறை கல்விக்கூடத்தில் அடிப்படைக் கல்வி, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஆகிய பள்ளிக்கல்விகளும், பி.ஏ, எம்.ஏ, எம்.பி.ஏ போன்ற உயர்கல்விகளும் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிப்படிப்புகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும், உயர்கல்விக்கு பாரதியார் பல்கலைக்கழகம், திறந்தவெளி பல்லைக்கழகங்களும் ஒத்துழைப்பு அளிக்கின்றன.

நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய 23 கைதிகள், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 44 கைதிகள், பிளஸ் 1 வகுப்பு தேர்வு எழுதிய 22 கைதிகள் என அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தினமும் கைதிகள் கல்விக்கூட வகுப்புகளுக்கு செல்கின்றனர். கற்பிக்கப்படும் பாடங்களை குறிப்பெடுக்கின்றனர். கல்விக்கூடத்தில் படிப்பது மட்டுமின்றி, சிறையில் தங்களது அறைகளில் இரவு நேரங்களிலும் படித்து எழுதிப்பார்க்கின்றனர். தொடர்ச்சியான, சிறப்பான கல்வி கற்பிப்பதன் மூலம் கைதிகள் பொதுத்தேர்வுகளில் சாதித்து வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x