Published : 01 May 2024 06:34 AM
Last Updated : 01 May 2024 06:34 AM

வெப்பத்தை தணிக்க வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய உ.பி பள்ளி

வகுப்பறையில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் விளையாடும் பள்ளிக் குழந்தைகள்.

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. மாநிலத்தில் வெப்ப அலை வீசுவதால் வெப்பத்தைத் தணிப்பதற்காக வகுப்பறையை நீச்சல் குளமாக ஒரு பள்ளி நிர்வாகம் மாற்றியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் தேர்வுகளை முடித்து விடுமுறையை அறிவித்துவிட்டன. இதனிடையே இறுதித் தேர்வுகளை முடிக்காத சில பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் வெப்பத்தைத் தணிக்க கன்னோஜ் மாவட்டம் மக்சவுனாபூர் பகுதியிலுள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இருந்த வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் இறங்கி விளையாடி வருகின்றனர்.

இதனால் வெப்பம் தணிவதோடு, குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நீச்சல்குளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும் வீடியோவையும் பள்ளி நிர்வாகிகள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வகுப்பறை தரையைச் சுற்றி 2 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு ஒரு அடி உயரத்துக்கு நீர்நிரப்பப்படுகிறது. இதில்தான் அந்த குழந்தைகள் நீந்தி விளையாடி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி முதல்வர் வைபவ் ராஜ்புத் கூறும்போது, “இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரைவெப்பம் நிலவுகிறது. தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலையும்வீசுகிறது. எனவே, குழந்தைகளை வெப்ப அலையிலிருந்து காக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம்.

முன்பு வெயில் அதிகமாக இருந்ததால் குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து வீட்டிலேயே இருந்தனர். தற்போது நீச்சல் குளம் கட்டிய பின்னர் அதிக அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x