Published : 03 Jul 2014 10:51 AM
Last Updated : 03 Jul 2014 10:51 AM
ப்ரீத்தி ஜிந்தா தன்மீது கூறியுள்ள தவறான குற்றச்சாட்டு என்று விளக்கமளித்து மும்பை போலீஸுக்கு தொழிலதிபர் நெஸ் வாடியா கடிதம் எழுதியுள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தாவின் குற்றச் சாட்டு தவறானது என்பதை நிரூபிப்பதற்காக விசாரிக்க வேண்டிய 9 நபர்களின் பெயரை யும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நெஸ் வாடியாவிடம் ஒரு சில நாள்களில் மும்பை போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மும்பை வான்கடே மைதானத்தில் இருந்த சிசிடிவி கேமரா வீடியோ பதிவுகளை போலீஸார் ஏற்கெனவே ஆய்வு செய்து விட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அந்த வீடியோ பதிவுகளில் இருந்து எந்த வலுவான ஆதாரமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ப்ரீத்தி ஜிந்தாவின் புகாரை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிக்கு நெஸ் வாடியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறி யிருப்பது:
மே 30-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது மும்பை வான்கடே மைதானத்தில் எங்களுடன் (நெஸ் வாடியா, ப்ரீத்தி ஜிந்தா) இருந்த 9 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளேன். இவர்களிடம் விசாரித்தால் அங்கு என்ன நடந்தது என்ற தகவல் கிடைக்கும். அவர்கள் நிச்சயமாக உண்மையைக் கூறுவார்கள். இதன் மூலம் ப்ரீத்தி ஜிந்தா என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது தெரியவரும் என்று அந்த கடிதத்தில் நெஸ் வாடியா கூறியுள்ளார்.
இக்கடிதத்தை அவரது பிரதிநிதி ஒருவர் மும்பை போலீஸில் அளித்தார். நெஸ் வாடியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்த பிறகு அவர் இப்போது முதல்முறையாக போலீஸாரை முறைப்படி தொடர்பு கொண்டுள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா நெஸ் வாடியா இடையிலான காதல் முறிந்த பிறகும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் என்ற முறையில் அவர்களிடையே தொழில் தொடர்பு தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT