Published : 08 Mar 2022 07:07 AM
Last Updated : 08 Mar 2022 07:07 AM

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவி உ.பி. கடைசி கட்ட தேர்தலில் வாக்களித்தார்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், ரஷ்ய தாக்கு தலுக்கு உள்ளாகி உள்ள உக்ரைனில் இருந்து, இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் உ.பி.யைச் சேர்ந்த மாணவி கிருத்திகாவும் ஒருவர். இவர் வாரணாசியில் நேற்று நடைபெற்ற கடைசி கட்ட தேர்தலில் வாக்களித்தார். பின்னர் கிருத்திகா கூறியதாவது:

உக்ரைனின் கார்கிவ் நகரில் படித்து வருகிறேன். நானும் இன்னும் மாணவர்கள் சிலரும் நாங்களாகவே கஷ்டப்பட்டு போலந்து நாட்டின் எல்லைக்கு வந்தோம். அங்கு சென்று சேர்ந்தபின்னர், இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து கடந்தசனிக்கிழமை இந்தியா திரும்பினோம். உக்ரைனில் நடக்கும் போரில் நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். அந்த பயத்தில் இருந்து இன்னும் நான் மீள முடியவில்லை. எனினும், தேர்தலில் வாக்களிப்பது எனது உரிமை.

உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று வருகிறேன். தற்போது போர் நடைபெறுவதால் எனது கல்வி என்ன ஆகும் என்பது கேள்வி குறியாக உள்ளது.

எனது மருத்துவ கல்வியை இந்தியாவில் தொடர முடியுமா என்று தெரியவில்லை. இங்கேயே மருத்துவக் கல்வி தொடர பிரதமர் மோடி அனுமதித்தால் இருப்பேன். இல்லாவிட்டால் மருத்துவ கல்வியை படித்து முடிக்க மீண்டும் உக்ரைன் செல்ல தயார்.

இவ்வாறு கிருத்திகா கூறினார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x