Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி 6 மாதத்தில் தயாராகும்: சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூனாவாலா தகவல்

புனே

கரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்ஸினைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாநிறுவனம் விரைவிலேயே 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி மருந்தைத் தயாரிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கோவோவாக்ஸ் என்ற பெயரில்தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிமருந்து தற்போது பரிசோதனை ரீதியில் உள்ளது. இது 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கரோனா வைரஸ் தாக்குவதிலிருந்து தடுக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது கரோனா வைரஸ் தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் உள்ளிட்டவை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படுகிறது.

குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில்இல்லை என்பதால் குழந்தைகள் குறித்து இப்போதைக்கு அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்து 6 மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.

ஏற்கெனவே இரண்டு நிறுவனங்கள் இத்தகைய தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளும் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது என்று அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு இத்தகைய தடுப்பூசி போடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, இது மிகவும் பாதுகாப்பானது, சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டது என்றும் குறிப்பிட்டார். இது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்ட பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முடிவை பெற்றோர்கள் எடுக்க வேண்டும் என்றும் அதுவரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x