Published : 20 Jun 2014 08:21 AM
Last Updated : 20 Jun 2014 08:21 AM

அனைத்து துறைகளிலும் இந்தியை பயன்படுத்த ஊக்குவிப்போம்: மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேட்டி

அரசின் அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழியை பயன்படுத்துமாறு மத்திய அரசு ஊக்குவிக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

இந்தி மொழி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய இணை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

“இந்தி மொழியை ஊக்குவிக்கும் அரசின் செயலை, மற்ற மொழிகளை தாழ்வுபடுத்தும் நடவடிக்கையாக கருதக்கூடாது.

அரசின் அனைத்துத் துறைகளிலும், பொது மக்களிடையேயும் தகவல் தொடர்புக்கு இந்தி மொழியை பயன்படுத்த முன்னுரிமை அளிக்குமாறு ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதே சமயம், மொழி, கலாச்சாரம், பன்முகத்தன்மை என்ற அடையாளங்களை கைவிடாமல் முன்னேற்றத்தை காண வேண்டும்.

இந்தியை ஊக்குவிப்பது, மற்ற மொழிகளை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. பிராந்திய மொழிகளை பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை.

இந்தி நமது ஆட்சி மொழி என்பதால், அதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்து” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x