Published : 29 May 2014 09:58 AM
Last Updated : 29 May 2014 09:58 AM
போலாவரம் அணைக்கட்டு அடிவாரத்தில் உள்ள கிராமங்களை தெலங்கானாவில் இருந்து சீமாந்திராவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தெலங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்கள் வரும் ஜூன் 2-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்க உள்ளதால், கம்மம் மாவட்டத்தில், போலாவரம் அணைக்கட்டின் கீழ் உள்ள 7 மண்டலங்களை சீமாந்திரா பகுதியில் சேர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், விரைவில் தெலங்கானா முதல்வராக பதவி ஏற்க உள்ளவருமான கே.சந்திரசேகர் ராவ், புதன்கிழமை ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
போலாவரம் அணைக்கட்டின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் இருக்கும் 136 கிராமங்கள் தெலங்கானாவிற்கு சொந்தமானது. இப்போது மத்திய அரசு, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இந்த மண்டலங்களை சீமாந்திரா பகுதியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தெலங்கானா பந்த் நடத்தப்படும், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சந்திரசேகர் ராவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT