Published : 13 Jan 2020 09:40 AM
Last Updated : 13 Jan 2020 09:40 AM

விதிகளை மீறி கட்டப்பட்ட மேலும் 2 கட்டிடங்கள் தகர்ப்பு

கேரள மாநிலம் கொச்சியின் மரடு பகுதியில், விதிகளை மீறி கட்டப்பட்ட கோல்டன் காயலோரம் அடுக்குமாடி குடியிருப்பு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது.படம்: எச்.விபு

கொச்சி

கேரள மாநிலம் கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மேலும் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் நேற்று வெடிபொருள் வைத்து தகர்க்கப்பட்டன.

கொச்சி, மரடு பகுதியில் ஹோலி பெய்த் எச்2ஓ, ஆல்பா ஷெரீன், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டன. 343 வீடுகள் கொண்ட இந்த கட்டிடங்கள் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் 4 கட்டிடங்களையும் இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து ஹோலி பெய்த் எச்2ஓ, ஆல்பா ஷெரீன் ஆகிய 2 கட்டிடங்கள் நேற்று முன்தினம் வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், 55 மீட்டர் உயரம் கொண்ட ஜெயின் கோரல் கோவ் கட்டிடம் நேற்று காலை 11 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதற்காக 350 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

இறுதியாக, 55 மீட்டர் உயரம் கொண்ட கோல்டன் காயலோரம் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று மதியம் 2.30 மணிக்கு இடிக்கப்பட்டது. இதன்மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x