Published : 23 Nov 2019 11:41 AM
Last Updated : 23 Nov 2019 11:41 AM

‘‘உங்கள் வழிகாட்டுதல்படி புதிய உச்சத்தை தொடுவோம்’’ - பிரதமர் மோடிக்கு பட்னாவிஸ் நன்றி

உங்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மகாராஷ்டிராவை மிகச்சிறந்த மாநிலமாக உருவாக்குவேம், புதிய உச்சத்தை தொடுவோம்என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கின. மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவும், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தசூழலில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.

2-வது முறையாக முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். ட்விட்டரில் பிரதமர் மோடி கூறுகையில், “முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மகாராஷ்டிாவின் ஒளியமயமான எதிர்காலத்துக்கு இவர்கள் சேர்ந்து உழைப்பார்கள் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷாவும் ட்விட்டரில் தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவாருக்கும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி மகாராஷ்டிாரவை மிகச்சிறந்த மாநிலமாக உருவாக்குவோம், புதிய உச்சத்தை தொடுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x