Published : 05 Jul 2017 09:29 AM
Last Updated : 05 Jul 2017 09:29 AM
பிரதமர் நரேந்திர மோடி சிறு வயதில் டீ விற்பனை செய்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மேசனா மாவட்டம் வாட்நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் நரேந்திர தாமோதர தாஸ் மோடி. சிறுவயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு நடைமேடையில் டீ கடை நடத்தி வந்த தனது தந்தைக்கு உதவியாக இருந்தார்.
பின்னர் அங்கு தனியாக டீ கடை நடத்தினார். அதன்பிறகு 8 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்த அவர் படிப்படியாக உயர்ந்து, குஜராத் முதல்வராகி, இப்போது பிரதமராக உள்ளார்.
இந்நிலையில், மோடியின் பிறந்த ஊரான வாட்நகரை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மோடி டீ விற்ற இடம் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
இதையடுத்து, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சக மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியை 2 தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை தாங்கிய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நமது பிரதமர் மோடி பிறந்த இடம் மட்டுமல்லாது, புகழ்பெற்ற ஷர்மிஷ்தா ஏரியைக் கொண்டுள்ள வாட்நகர் வரலாற்று சிறப்புமிக்க இடம் ஆகும். மேலும் இப்பகுதியில் மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது புத்த மடம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அகழ்வுப் பணி தொடர்கிறது.
மேலும் வாட்நகர் ரயில் நிலைய நடைமேடையில், பிரதமர் மோடி சிறுவயதில் டீ விற்பனை செய்த இடம் அதன் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT