Published : 04 Jul 2017 09:56 AM
Last Updated : 04 Jul 2017 09:56 AM
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று இஸ்ரேல் செல் கிறார். இந்தப் பயணத்தின்போது தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்நாட்டு பிரதமருடன் ஆலோ சனை நடத்த உள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்துக்கே வந்து வரவேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் அல்லது போப் ஆகியோருக்கு மட்டுமே இதுபோன்ற சிறப்பு வரவேற்பு வழங்கப்படுவது வழக்கம். மேலும் மோடி பங்கேற் கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நெதன்யாகுவும் கலந்துகொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு உறவை பலப்படுத்துவது உள் ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்புக்குப் பிறகு அறிவியல் தொழில்நுட்பம், தண்ணீர் மேலாண்மை, விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அந்நாட்டு அதிபர் ரியூவென் ருவி ரிவ்லினையும் மோடி சந்தித்துப் பேச உள்ளார். பின்னர் இரு நாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்திலும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்தப் பயணம் குறித்து மோடி ட்விட்டரில், “இஸ்ரேல் நாட்டுக் கான வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுவடையும்” என பதிவிட்டுள்ளார்.
வரும் 6-ம் தேதி இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொள்ளும் மோடி, 7, 8-ம் தேதிகளில் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT