Published : 06 Jul 2017 08:51 AM
Last Updated : 06 Jul 2017 08:51 AM
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் இம்ரான் அன்சாரி, தேசிய மாநாட்டுக் எம்எல்ஏ தேவேந்தர் ரானாவை ஒழித்துகட்டிவிடுவதாக மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில் மட்டும் ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் விவாதம் நடந் தது. இதில் பேசிய தேசிய மாநாட் டுக் கட்சி எம்எல்ஏ தேவேந்தர் ரானா, ஜிஎஸ்டியை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வெற்று உமியாக மாறிவிடும் என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இம்ரான் அன்சாரி, ‘‘சட்டப்பேரவையில் தான் ஜிஎஸ்டியை ரானா எதிர்க்கிறார். ஆனால் ஏற்கெனவே இந்த புதிய வரி ஆளுமையின் கீழ் தனது தொழில்களை அவர் மாற்றிக் கொண்டுவிட்டார். இந்த விவகாரத் தில் ரானா இரட்டை நிலைப் பாட்டுடன் செயல்படுகிறார்’’ என்று குற்றம்சாட்டினார்.
அத்துடன் ரானா மற்றும் அவரது குடும்பத்தார் நடத்தும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவு எண்களையும் அவர் வாசித்து காண்பித்தார். இதற்கு பதில் அளித்த ரானா, ‘‘ஜிஎஸ்டி பதிவு எண்களை பெற்றதன் மூலம் நான் எந்த தவறையும் செய்ய வில்லை. காஷ்மீரில் ஜிஎஸ்டி அமலுக்கு வராத நிலையில், அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை. தவிர நான் வரி ஏய்ப் பிலும் ஈடுபடவில்லை’’ என்றார்.
இதனால் ஆவேசமடைந்த அன்சாரி, ‘‘இங்கேயே உன்னை ஒழித்துகட்டிவிடுவேன். உனது நிழல் உலக வியாபாரங்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும். உன்னைவிட பெரிய திருடன் யாரும் இல்லை. சாதாரண மொபில் ஆயில் வியாபாரியான உனக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது?’’ என்றார். இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. எனினும் ரானா நிதானம் இழக்காமல் இருந்தார். இந்த சூழலில் ரானாவுக்கு ஆதரவாக தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த எம்எல்ஏக்கள் குரல் எழுப்பினர். ரானாவின் வாயை அடைக்க, அன்சாரி திட்டமிடக் கூடாது. அது தவறானது. அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை இருக்கிறது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினரையும் கண்டித்த துணை சபாநாயகர் நசிர் அகமது குரேஸி, ‘‘வீண் விவாதத்தில் ஈடுபட்டு மக்கள் பணத்தை விரயமாக்க வேண்டாம்’’ என கேட்டுக் கொண்டார்.
தீர்மானம் நிறைவேற்றம்
காங்கிரஸ். தேசிய மாநாட்டு கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே ஜிஎஸ்டியை அமல் படுத்துவதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.
முன்னதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஹசீப் டிரபு தீர் மானத்தை கொண்டு வந்தார். அப் போது ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்டாலும், காஷ்மீருக்கு உள்ள சிறப்பு அந்தஸ்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரி வித்தார். ஒருவேளை அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ஜிஎஸ்டி அர்த்தமற்றதாக்கினால், இந்த பேரவைக்கு மீண்டும் நான் வரமாட்டேன் என ஹசீப் டிரபு உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT