Published : 22 Jun 2017 09:08 AM
Last Updated : 22 Jun 2017 09:08 AM
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக தலித் பிரிவின் முன்னாள் தலைவர் ஆவார்.
அவருக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அம்பேத்கரின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் அம்பேத்கரை எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்த இடதுசாரிகள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரகாஷ் அம்பேத்கரை தவிர்த்து மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், மத்திய உள்துறை முன்னாள் அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்திய கம்யூனி்ஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரும் வேட்பாளர் பரிசீலனையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT