Published : 18 Jun 2017 10:45 AM
Last Updated : 18 Jun 2017 10:45 AM
சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக கோவா அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளது.
சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்ததை அடுத்து, கேரளா, மேற்கு வங்கம், பிஹார், கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மனோகர் பாரிக் கர் தலைமையிலான கோவா பாஜக அரசு, மாட்டிறைச்சி விவகாரத்தில் மக்களின் அச்சத்தை களையும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி கடிதம் எழுத உள்ளது. இதுதொடர்பாக அம்மாநில வேளாண் அமைச்சர் விஜய் சர்தேசாய் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் ஆலோசித்தேன். இந்தத் தடை காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சமும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. எனவே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் சில விதிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவும் சிலவற்றில் மாற்றம் செய்யக் கோரியும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளதாக முதல்வர் என்னிடம் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி உண்பவர்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகத்தைத் தீர்ப்பது அவசியம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT