Published : 18 Nov 2025 07:46 AM
Last Updated : 18 Nov 2025 07:46 AM
புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்களுடன் ஓட்டிச் சென்று டெல்லி செங்கோட்டை பகுதியில் வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில், 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட மருத்துவர் ஷாகின் சயீத் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக இந்தியாவில் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது செல்போனை ஆராய்ந்ததில் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருந்தன. அது மீட்டெடுக்கப்பட்டு ‘‘மேடம் எக்ஸ், மேடம் இசட்’’ என்ற இரண்டு பெண்களிடம் ஷாகின் தொடர்ச்சியாக பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு இடையில் குறியீட்டு சொற்களின் வழியாக தீவிரவாத தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். மருத்துவர் ஷாகினை ‘‘மேடம் சர்ஜன்’’ என்று
அவர்கள் அழைத்துள்ளனர்.
மேடம் எக்ஸ், மேடம் இசட் ஆகிய இரண்டு எண்களிடமிருந்து ஷாகினுக்கு தொடர்ச்சியாக அழைப்பு மற்றும் செய்திகள் வந்துள்ளன. அதில், 'மெடிசின்' என்ற வார்த்தையை அடிக்கடி சாட் செய்துள்ளனர். இது, வெடிமருந்தை குறிக்கும் குறியீட்டு சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேடம் எக்ஸ், ஷாகினுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில், “ஆபரேஷனுக்கு மருந்து பற்றாக்குறை இருக்கக்கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆபரேஷன் என்ற சொல் தீவிரவாத தாக்குதலின் குறியீட்டு சொல்லாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மேடம் இசட் அனுப்பிய மற்றொரு செய்தியில், “மேடம் சர்ஜன், தயவு செய்து ஆபரேஷன் ஹாம்டார்டில் அதிக கவனம் செலுத்துங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆபரேஷன் ஹாம்டார்ட் என்ற சொல் அவர்களது இயக்கத்துக்கு பெண் தீவிரவாதிகளை சேர்ப்பதை குறிக்கிறது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT