Published : 16 Nov 2025 09:17 AM
Last Updated : 16 Nov 2025 09:17 AM
புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் அல் பலா பல்கலைக்கழகத்தின் 2 மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10-ம் தேதி மாலை ஒரு கார் வெடித்து சிதறிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய மருத்துவர் உமர் நபி ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தவர். இது தொடர்பாக 3 மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹரியானாவின் தவுஜ், நூஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டெல்லி போலீஸார் மற்றும் மத்திய அமைப்புகளின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் உமர் நபிக்கு தெரிந்த 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 3 பேரை டெல்லி போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: ஹ் பகுதியில் அல் பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகம்மது, முஸ்தாகிம் என்ற மருத்துவர்களை என்ஐஏ உதவியுடன் டெல்லி போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். இவர்கள் உமர் நபியின் நெருங்கிய நண்பர்கள். மேலும் தீவிரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜாம்மில் உடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர், கார் குண்டு வெடிப்பு நாளில் டெல்லியில் இருந்துள்ளார். இருவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோல் நூஹ் பகுதியில் உரிமம் இல்லாமல் உரம் விற்பனை செய்த தினேஷ் என்கிற தாப்பு போலீஸ் பிடியில் உள்ளார். வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் என்பிகே உரம் வாங்க தீவிரவாதிகள் ரூ.3 லட்சம் செலவிட்டிருப்பது தெரியவந்ததால் அவர்களுக்கு தினேஷ் உரம் விற்பனை செய்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT