Published : 11 Nov 2025 03:11 PM
Last Updated : 11 Nov 2025 03:11 PM
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் பகல் 1 மணி வரை 47.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 121 தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில், முன் எப்போதும் இல்லாத அளவாக 65.08% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 47.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 51.86% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்ததாக கயா மாவட்டத்தில் 50.95% வாக்குகளும், ஜமுய் மாவட்டத்தில் 50.91% வாக்குகளும், பங்கா மாவட்டத்தில் 50.07% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மதுபானி மாவட்டத்தில் மிகவும் குறைவாக 46.87% வாக்குகள் பதிவாகி உள்ளன. அராரியாவில் 46.87%, அர்வாலில் 47.11%, அவுரங்காபாத்தில் 49.45%, பாகல்பூரில் 45.09%, பஹனாபாத்தில் 46.07%, கைமூரில் 49.89%, கத்திஹாரில் 48.50%, நவாடாவில் 43.45%, சாம்பரனில் 48.91%, புர்னியாவில் 49.22% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
பிஹார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ் ராம், ஆட்டோ ரிக்ஷாவில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்காளர்கள் அனைவரும் இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும். அதிக அளவில் வாக்குகள் பதிவாக வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அஸ்வினி குமார் சவுபே, தேசிய ஜனநாயகக் கூட்டணி 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், மாநில அமைச்சர்கள் விஜேந்திர யாதவ், லெசி சிங், ஜெயந்த் குஷ்வாஹா, சுமித் சிங், முகம்மது ஜமா கான், ஷீலா மண்டல், பிரேம் குமார், ரேணு தேவி, விஜய் குமார் மண்டல், நிதிஷ் மிஸ்ரா, நீரஜ் பப்லு, பிருஷ்ணானந்தன் பாஸ்வான் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 14-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT