Published : 10 Nov 2025 09:54 PM
Last Updated : 10 Nov 2025 09:54 PM
புதுடெல்லி: டெல்லி - செங்கோட்டை பகுதிக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையில் நுழைவு வாயிலுக்கு அருகே கார் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:
“இன்று மாலை சுமார் 7 மணி அளவில் டெல்லி - செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுபாஷ் மார்க் டிராஃபிக் சிக்னல் பகுதியில் ஐ20 கார் ஒன்று வெடித்தது. இதில் அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தனர் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி உயிரிழப்புகளும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள் டெல்லி போலீஸார் அங்கு சென்றனர். தேசிய புலனாய்வு முகமையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் என்எஸ்ஜி அமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரித்து அதை மக்களிடம் தெரிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT