Last Updated : 10 Nov, 2025 04:42 PM

 

Published : 10 Nov 2025 04:42 PM
Last Updated : 10 Nov 2025 04:42 PM

எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலம் செல்ல வேண்டியிருக்காது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: “பிஹார் மாற்றத்துக்குத் தயாராக உள்ளது. எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். எந்த ஒரு பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கூறினார்.

பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் எந்த வெற்றியையும் காணவில்லை. நவம்பர் 14-க்குப் பிறகு, பிஹாரின் வெற்றிப் பட்டியல் தொடங்கும். எங்கள் ஆட்சியில் பிஹார் மிகவும் வளர்ந்த மாநிலமாக மாறும். உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கல்விக்கான வசதிகள், மருத்துவம் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பிஹாரில் இருக்கும்.

ஐடி மையங்கள் மற்றும் கல்வி நகரங்களும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும் பிஹாரில் கட்டப்படும். எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலைக்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சுமார் 171 பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளோம், இதுவே அதிக எண்ணிக்கை என்று நான் நம்புகிறேன். நாங்கள் செல்லாத ஒரு மாவட்டம் அல்லது தொகுதி கூட இல்லை. பிஹார் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் கவனித்தோம். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் பேரணிகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர், அனைவரும் ஒரே விஷயத்தைச் சொன்னார்கள்: வறுமை, இடம்பெயர்வு, வேலையின்மை அல்லது சட்டவிரோத தொழிற்சாலைகளின் பெருக்கம் என எதுவாக இருந்தாலும் என்டிஏ அரசாங்கம் 20 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை.

என்டிஏ விரும்பியிருந்தால், பிஹாரை முதன்மை மாநிலமாக மாற்றியிருக்க முடியும். பிஹாரில் இருந்து ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இப்போது பிஹார் மக்கள் முன்னேற விரும்புகிறார்கள்; அவர்கள் பிஹாரில் அனைத்து வசதிகளும் வேண்டும் என விரும்புகிறார்கள். பிஹார் முழுவதும் நாங்கள் நடத்திய 171 கூட்டங்களிலும், அனைவரும் இந்த முறை மாற்றத்தை விரும்புகிறோம் என்று ஒருமனதாகக் கூறினர்.

பிஹார் மக்கள் இந்த முறை வரலாற்றைப் படைத்து, வேலைகளை வழங்கும் ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வருவார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த முறை, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அரசாங்கத்தை மக்கள் கொண்டு வரப் போகிறார்கள்” என்றார்

பிஹாரில் 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ல் முடிவடைந்தது. 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (நவம்பர் 11) நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x