Published : 10 Nov 2025 08:35 AM
Last Updated : 10 Nov 2025 08:35 AM
சண்டிகர்: ஹரியானாவின் குருகிராம் பகுதி செக்டர் 48-ஐ சேர்ந்த மாணவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கும் இடையே இரு மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன்பிறகு இருவரும் இயல்பாக பழகி வந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு செக்டர் 48-ஐ சேர்ந்த மாணவரை, சக மாணவர் தனது வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வேறொரு மாணவரும் இருந்துள்ளார். 3 மாணவர்களும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய மோதல் விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சக மாணவர் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து செக்டர் 48 பகுதி மாணவரை குறிவைத்து சுட்டார். இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
தகவல் அறிந்து குருகிராம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி குண்டு காயமடைந்த மாணவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை துப்பாக்கியால் சுட்ட மாணவர் மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT