Published : 10 Nov 2025 08:25 AM
Last Updated : 10 Nov 2025 08:25 AM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது.
இண்டியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகளை கொண்ட இக்கூட்டணியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பிஹார் தேர்தலில் ஜேஎம்எம் கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கப்படவில்லை.
இதனால், 6 தொகுதிகளில் அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்கும் மெகா கூட்டணியில் எந்த தாக்கமும் இல்லை என்பதால் பிஹார் தேர்தலில் இருந்து விலகி விட்டது.
இதன் காரணமாக, நவம்பர் 14-ல் வெளியாகும் பிஹார் தேர்தல் முடிவுக்கு பிறகு ஜார்க்கண்ட் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகிறது. இண்டியா கூட்டணியில் இருந்து ஜேஎம்எம் விலகும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கூட்டணி மறுபரிசீலனை: இதுகுறித்து ஜார்க்கண்ட் அமைச்சரும் ஜேஎம்எம் மூத்த தலைவருமான சுதிப்ய குமார் கூறுகையில், ‘‘ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஆர்ஜேடி, காங்கிரஸுக்கு நாங்கள் இடமளித்துள்ளோம். பிஹார் தேர்தலில் இருந்து நாங்கள் விலக இந்த கட்சிகளே காரணம். இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி, காங்கிரஸ் உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்’’ என்றார்.
இந்நிலையில் ஜார்க்கண்டில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் விலக்கப்பட்டால் பாஜகவுடன் ஜேஎம்எம் மீண்டும் கைகோக்கும் வாய்ப்புகள் உருவாகி வருதாக கருதப்படுகிறது. ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT