Last Updated : 06 Nov, 2025 04:39 PM

 

Published : 06 Nov 2025 04:39 PM
Last Updated : 06 Nov 2025 04:39 PM

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு

பாட்னாவின் பக்தியார்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 59.82% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 48.69% வாக்குகள் பதிவாகி உள்ளன.

லக்கிசராய் மாவட்டத்தில் 57.39% வாக்குகளும், முசாஃபர்பூர் மாவட்டத்தில் 58.40% வாக்குகளும், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 58.17% வாக்குகளும் பதிவாகி உள்ளன. போஜ்பூர் மாவட்டத்தில் 41.15%, பக்ஸர் மாவட்டத்தில் 51.69%, தர்பங்காவில் 51.75%, காகாரியாவில் 54.77%, முங்கெரில் 52.17%, நாளந்தாவில் 52.32%, சஹார்சாவில் 52.22%, சமஸ்திபூரில் 56.35%, சரணில் 54.60%, ஷேக்புராவில் 49.37%, சிவானில் 50.93%, வைஷாலியில் 53.63% வாக்குகள் பதிவாகி உள்ளன.

விவிஐபிக்கள் போட்டியிடும் தொகுதிகளான ரகோபூரில் 55.20%, மஹூவாவில் 52.11%, தாராபூரில் 55.33%, லக்கிசராயில் 55.47%, சாப்ராவில் 50.88%, பன்கிபூரில் 34.80%, புல்வாரியில் 54.12%, ரகுநாத்பூரில் 50.63%, சிவணில் 51.65%, மொகாமாவில் 55.12% வாக்குகள் பதிவாகி உள்ளன.

முதல் கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக - அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி - சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி - கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகுதிகளில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யில் உள்ளனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டுள்​ளன.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x