Published : 05 Nov 2025 06:02 PM
Last Updated : 05 Nov 2025 06:02 PM
பாட்னா: காங்கிரஸ் வாரிசு அரசியலை பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டுபவர்களால், எங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என பிரியங்கா காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சம்பாரண் மாவட்டத்தின் வால்மிக நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, "நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம். நாட்டின் செல்வம் உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். எங்கள் முன்னோர்கள் சுதந்திரத்துக்காகப் போராடினர். உங்கள் முன்னோர்களில் பலரம் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகங்களை செய்துள்ளனர்.
இங்குள்ள மண் உங்கள் ரத்தத்திலும் எங்கள் ரத்தத்திலும் ஊறியுள்ளது. ஆனால், வாரிசு அரசியல் இருப்பதாக மேடைகளில் கதறுபவர்களால், எங்கள் முன்னோர்கள் புரிந்த தியாகங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இது வாரிசு அரசியல் அல்ல. மாறாக, நாட்டுக்கான எங்கள் தர்மம்.
காலை முதல் மாலை வரை பாஜக தலைவர்கள் நேருவை அவமதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை பாதிக்கும் அனைத்து தீமைகளுக்கும் அவரையே குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரத்தில், நியூயார்க் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், நேருவை புகழ்ந்து பேசி உள்ளார். ஆனால், நேருவின் சொந்த நாட்டில் அவர் மீது தினமும் அவமானங்கள் குவிக்கப்படுவதைக் காண்கிறோம்.
பிஹாரில் எளிய மக்களின் வாக்களிக்கும் உரிமை ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு எனது சகோதரர் ராகுல் காந்தி, அவர்களுக்காக யாத்திரை மேற்கொண்டார். அந்த வாக்காளர் அதிகார யாத்திரையில் நானும் சிறிது கலந்து கொண்டேன். தற்போது எனது சகோதரர் ஹரியானாவில் நடந்த வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி உள்ளார். வாக்காளர் உரிமை குறித்து நாங்கள் பேசும்போது, ஊடுருவியர்களுக்காக நாங்கள் பணியாற்றுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். மக்களே, நீங்கள் உங்களை ஊடுருவியவர்களாகக் கருதுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
சசி தரூர் விமர்சனம்: முன்னதாக, வாரிசு அரசியலால் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்திருந்தார். செக் குடியரசை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச ஊடகமான புராஜெக்ட் சிண்டிகேட்-டில் 'இந்திய அரசியல் - குடும்ப வணிகம்' என்ற தலைப்பில் சசி தரூர் எழுதிய கட்டுரையில், "இந்தியாவில் கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை குடும்ப அரசியல் வியாபித்து பரவி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய அரசியலில் ஜவஹர்லால் நேரு குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார்.
இதன் பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமரானார். அடுத்து அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்தார். தற்போது நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரது தங்கை பிரியங்கா காந்தி எம்.பி.யாக உள்ளார். இந்தியாவின் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வாரிசு அரசியல் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் 11 மத்திய அமைச்சர்கள், 9 முதல்வர்கள் வாரிசு அரசியலின் உதாரணங்களாக விளங்குகின்றனர்.
வாரிசு அரசியலால் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. திறமையை புறந்தள்ளி வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதால் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. வாரிசு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண அடிப்படை சீர்த்திருத்தங்கள் அவசியமாகிறது" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT