Last Updated : 05 Nov, 2025 11:17 AM

 

Published : 05 Nov 2025 11:17 AM
Last Updated : 05 Nov 2025 11:17 AM

சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் மெமு பயணிகள் ரயில் கோர்பா மாவட்டத்திற்கு அருகிலுள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்தவுடன் உடனடியாக நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும், காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த பயணிகள் பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மிகவும் வேகமாக மோதியதால், பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி சரக்கு ரயிலின் ஒரு பெட்டியின் மேல் ஏறியது. “சிவப்பு சிக்னலை மீறி பயணிகள் ரயில் மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் சரக்கு ரயிலின் மீது மோதியது. சரக்கு ரயில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் இருந்தபோதும், லோகோ பைலட் சிவப்பு சிக்னலைத் தாண்டி அவசரகால பிரேக்கை சரியான நேரத்தில் பயன்படுத்தத் தவறியது ஏன் என விசாரணை நடந்து வருகிறது.” என்று மூத்த ரயில்வே அதிகாரி கூறினார்.

பயணிகள் ரயிலின் லோகோ பைலட் வித்யா சாகர் விபத்தில் உயிரிழந்த நிலையில், உதவி லோகோ பைலட் ரஷ்மி ராஜ் பலத்த காயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், தேவையான நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கவும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மட்டத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடும் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x