Published : 05 Nov 2025 12:45 AM
Last Updated : 05 Nov 2025 12:45 AM
புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைது செய்யப்பட்ட ரவி உப்பலை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2018-ம்ஆண்டு ‘மகாதேவ்' என்ற சூதாட்ட செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். இவர்கள் காவல் துறையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களுக்கு அவ்வப்போது லஞ்சம் வழங்கி வந்துள்ளனர்.
குறிப்பாக, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.508 கோடி வாங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ரவி உப்பலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ரவி உப்பல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் (யிஏஇ) துபாயில் கைது செய்யப்பட்டார். எனினும், 45 நாட்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே அவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து, அரசின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், ரவி உப்பலை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT