Published : 02 Nov 2025 10:41 AM
Last Updated : 02 Nov 2025 10:41 AM
பாட்னா: ‘‘பிஹாரில் எனது சொந்த குடும்பத்துக்காக, நான் எதையும் செய்யவில்லை’’ என்று முதல்வர் நிதிஷ்குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தல் வரும் 6 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், ஆர்ஜேடி - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. இரண்டு கூட்டணிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், என்டிஏ கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று வெளியிட்ட வீடியோவில் வாக்காளர்களிடம் உருக்கமாக பேசியுள்ளார். அதில் நிதிஷ் கூறியிருப்பதாவது:
எனதருமை பிஹார் சகோதர, சகோதரிகளே… கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிஹார் மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். அப்போது பிஹார் இருந்த நிலைமை முற்றிலும் மோசமாக இருந்தது. அப்போது பிஹாரியாக இருப்பது மிகவும் அவமானமாக இருந்தது. ஆனால், உங்கள் ஆதரவுடன் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இரவு பகலாக நேர்மையுடன் செயலாற்றி வருகிறோம். கடினமாக உழைத்து வருகிறோம். பிஹாரில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டோம்.
கல்வி, சுகாதாரம், வேளாண்மை, இளைஞர்கள் நலன் போன்ற அனைத்து துறைகளையும் மேம்படுத்த வேண்டியிருந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக சரி செய்தோம். தற்போது கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சார வசதி, குடிநீர் வசதி, வேளாண் முன்னேற்றம், இளைஞர்களின் முன்னேற்றம் போன்றவை மேம்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் லாலு ஆட்சிக் காலத்தில் பிஹார் மக்களுக்கு எதுவும் நடைபெறவில்லை. குடும்ப அரசியலை மட்டுமே அவர் முன்னிறுத்தினார். தனது குடும்பத்தினரின் முன்னேற்றத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கு லாலு ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தற்போது பெண்களை நாங்கள் வலிமையுள்ளவர்களாக மாற்றி இருக்கிறோம். இனி அவர்கள் வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லை. அவர்கள் தற்போது தங்கள் குடும்பத்துக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். அனைத்து சமூகத்தவரின் நலனுக்காக இந்த அரசு உழைத்து வருகிறது.
நாங்கள் அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்காகவும் நேர்மையாகவும், கடுமையாகவும் பாடுபட்டு வருகிறோம். எங்கள் குடும்பத்துக்காக நாங்கள் எதையும் செய்து கொள்ளவில்லை. இப்போது பிஹாரி என்று சொல்வதில் அவமானமில்லை. மதிப்பாக இருக்கிறது.
பிரதமர் மோடியின் ஆதரவுடன் பிஹார் மாநிலம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, உங்களை வேண்டுவது எல்லாம் ஒன்றுதான். வரும் 6 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறும் தேர்தலில் பிஹார் வாக்காளர்கள் அனைவரும் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். உங்களுக்காக சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் நிறைய திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஜெய் ஹிந்த், ஜெய் பிஹார். இவ்வாறு முதல்வர் நிதிஷ்குமார் வீடியோவில் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT