Published : 30 Oct 2025 08:26 AM 
 Last Updated : 30 Oct 2025 08:26 AM
பெங்களூரு: கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக கர்நாடகா மீது திட்டமிட்டு எதிர்மறை பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் சில நிறுவனங்கள் கர்நாடகாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளன. அந்த நிறுவனங்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளது. பன்னாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கர்நாடகாவில் தொழில் தொடங்க அழைத்து வருகிறோம். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின்போது டெல்லியில் இருந்து சில அதிகாரிகள் அவர்களிடம் பேசி, அவர்களை வேறு மாநிலங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
கூகுள் நிறுவனம் முதலில் பெங்களூருவில் அலுவலகம் அமைக்க முடிவெடுத்தது. ஆனால் மத்திய பாஜக அரசு தலையிட்டு, அவர்களை ஆந்திராவுக்கு அனுப்பி விட்டது. பிரதமர் மோடி தனது கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவுக்கு அன்பளிப்பாக அதனை அளித்துள்ளார். செமி கன்டக்டர் நிறுவனத்தை குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி விட்டது. கர்நாடகாவில் தொழில்துறை மோசமடைவதற்கு மத்திய அரசே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT