Published : 29 Oct 2025 02:16 PM
Last Updated : 29 Oct 2025 02:16 PM
புதுடெல்லி: சர்வதேச அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும், வளத்துக்கும் இந்தியா - ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராகவும், அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகவும் அண்மையில் சனே தகைச்சி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஏற்கெனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில், புதிய பிரதமர் சனே தகைச்சியுடன், மோடி தொலைபேசியில் பேசினார். அது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் பிரதமர் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா - ஜப்பான் உறவை மேம்படுத்துவது குறித்த சிந்தனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.
இருநாடுகளின் பொருளாதார பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, அறிவுசார் பங்களிப்பு குறித்து ஆலோசித்தோம். இருவருமே, உலக அமைதி, ஸ்திரத்தன்மை, மற்றும் வளத்தை உறுதி செய்வதில் இந்தியா - ஜப்பானின் வலுவான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் உடன்பட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் பெண் பிரதமர்: ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் தலைவர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.
அதனால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். முதல் கட்டமாக கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றார். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் டகைச்சி பெரும்பான்மையை நிரூபித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT