Published : 29 Oct 2025 08:03 AM
Last Updated : 29 Oct 2025 08:03 AM
பாட்னா: பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மெகா கூட்டணி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி, பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இரண்டு கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா ஆகியோர் மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.
இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதுதான் தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.
ஜீவிகா டிடி திட்டத்தின் கீழ் பணிபுரிகிறவர்களுக்கு நிரந்தர அரசுப் பணியாளர் அந்தஸ்து வழங்கப்படும். இதுபோல ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையைப் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசின் வக்பு திருத்த சட்டம் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT