Last Updated : 23 Oct, 2025 02:23 PM

2  

Published : 23 Oct 2025 02:23 PM
Last Updated : 23 Oct 2025 02:23 PM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்!

பாட்னா: மோசடி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிஹார் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் அனில் சஹானி பாஜகவில் இணைந்தார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த அனில் சஹானி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்.

2012 ஆம் ஆண்டு ஆர்ஜேடி கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபோது, ​​பயணங்களை மேற்கொள்ளாமலேயே போலி விமான டிக்கெட்டுகளை சமர்ப்பித்து சலுகைகளை பெற்ற குற்றச்சாட்டில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனில் சஹானியை 2022ஆம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதன் காரணமாக பிஹார் எம்எல்ஏவாக இருந்த அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்

அனில் சஹானி 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் குர்ஹானி தொகுதியில் இருந்து பாஜகவின் கேதார் குப்தாவை 712 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டு சஹானி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேதார் குப்தா வெற்றி பெற்று அமைச்சரானார்.

அனில் சஹானி பாஜகவில் இணைந்துள்ளதால், அவரது சொந்த மாவட்டமான முசாபர்பூரில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த 'நிஷாத்' சமூகத்தின் வாக்குகளை கவரலாம் என பாஜக நம்பிக்கையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x