Published : 23 Oct 2025 01:29 AM
Last Updated : 23 Oct 2025 01:29 AM
புதுடெல்லி: தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தீபாவளி வாழ்த்துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
அதிபர் ட்ரம்ப், உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த தீபத் திருநாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நம்பிக்கையுடன் உலகை ஒளிரச் செய்வதுடன், தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து ஒற்றுமையாக நிற்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், வரிவிதிப்பு, எச்1பி விசா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க - இந்தியா உறவு மோசமான நிலையை அடைந்துள்ள நேரத்தில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 21-ம் தேதி பிரதமர் மோடியுடன் பேசிய பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம், பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி பேசினோம். அவர் ரஷ்யாவிடமிருந்து இனி அதிகம் எண்ணெய் வாங்கப் போவதில்லை. என்னைப் போலவே அந்தப் போர் முடிவடைவதையே அவரும் விரும்புகிறார்’ என்று தெரிவித்திருந்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கையேற்றி வைத்து அவர் தீபாவளியைக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவத்ரா, எப்பிஐ தலைவர் காஷ் படேல், உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்ட், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இந்திய, அமெரிக்க தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT