Last Updated : 21 Oct, 2025 03:18 PM

 

Published : 21 Oct 2025 03:18 PM
Last Updated : 21 Oct 2025 03:18 PM

மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானது: பிரதமர் மோடி

புதுடெல்லி: மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உற்சாகம் நிறைந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர், நீதியை நிலைநிறுத்தக் கற்றுக் கொடுக்கிறார், அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தைத் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஆபரேஷன் சிந்தூர் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆபரேஷன் சிந்தூரின்போது நமது நாடு நீதியை நிலைநாட்டியது. அது மட்டுமல்லாமல், அநீதியை பழிவாங்கியது.

இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், நக்ஸலிசம் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாதம் வேரோடு பிடுங்கி எரியப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களும் இம்முறை தங்கள் பகுதிகளில் தீபாவளியன்று விளக்குகளை ஏற்றி பண்டிகையைக் கொண்டாடினர். சமீப காலங்களாக, மாவோயிஸ்டுகள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, வளர்ச்சி நீரோட்டத்தில் இணைந்து நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதைக் கண்டோம். இது நாட்டுக்கு மிகப் பெரிய சாதனை.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கு மத்தியில், நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாள் முதல் குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த ஜிஎஸ்டி சேமிப்பு விழாவின்மூலம் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகின்றனர்.

பல நெருக்கடிகளை சந்தித்து வரும் உலகில், இந்தியா நிலைத்தன்மை மற்றும் உணர்திறன் (stability and sensitivity) ஆகிய இரண்டின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இந்த பயணத்தில், குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, நாட்டுக்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

உள்ளூர் தயாரிப்புகளையே வாங்குவோம். இது சுதேசி என்று பெருமையுடன் கூறுவோம். ஒரே பாரதம்; உன்னத பாரதம் என்ற உணர்வை ஊக்குவிப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மை பேணுவோம். நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து யோகாவை ஏற்றுக்கொள்வோம். இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி விரைவாக நகர்த்தும்.

ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றும்போது அதன் ஒளி குறையாது. மாறாக அது மேலும் வளரும். இதையே தீபாவளி நமக்கு கற்பிக்கிறது. இதே மனப்பான்மையுடன் இந்த தீபாவளியில் நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நேர்மறைத் தீபங்களை ஏற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x