Published : 20 Oct 2025 07:22 AM
Last Updated : 20 Oct 2025 07:22 AM
பாட்னா: வரும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பிஹார் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101, லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இதுவரை இறுதி செய்யப்படவில்லை. பிஹார் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மெகா கூட்டணி சார்பில் முதல் கட்ட தேர்தலுக்காக 125 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்படி ஆர்ஜேடி சார்பில் 72 பேர், காங்கிரஸ் சார்பில் 24 பேர், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் 21 பேர், விஐபி சார்பில் 6, ஐஐபி சார்பில் 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் கடந்த 16-ம் தேதி 48 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 5 பேர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த கட்சி சார்பில் இதுவரை 53 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இதுவரை இழுபறியாகவே உள்ளது. மெகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் காங்கிரஸ் - ஆர்ஜேடி இடையே குழப்பம் நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT