Published : 16 Oct 2025 08:46 AM
Last Updated : 16 Oct 2025 08:46 AM
சுக்மா: சத்தீஸ்கரில் நேற்று 42 பெண்கள் உட்பட 77 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். நக்சல் அபாயம் உள்ள மாநிலங்களில் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நக்சலைட்கள் சரணடைவதும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல் தலைவர் சோனு சரண் தலைமையில், 60 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 10 பெண்கள் உட்பட 27 நக்சலைட்கள் சிஆர்பிஎப் போலீஸ் அதிகாரிகள் முன்பு நேற்று சரணடைந்தனர். இவர்களில் பலரது தலைக்கு ரூ.50 லட்சம் வரை பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் நேற்று நக்சல் கமாண்டர் ராஜ்மன் மண்டாவி தலைமையில் 32 பெண்கள் உட்பட 50 நக்சலைட்கள் எல்லை பாதுகாப்புப் படையினர் முன்பு சரணடைந்தனர். இந்நிகழ்ச்சியில் அவர்கள் 39 ஆயுதங்களையும் ஒப் படைத்தனர். பிஜப்பூர் மாவட்டம் பாய்ரம்கர் பகுதியில் இன்று காலை 120 நக்சலைட்கள் சரணடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT