Published : 15 Oct 2025 07:17 PM
Last Updated : 15 Oct 2025 07:17 PM
புதுடெல்லி: மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட (most-affected) மாவட்டங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மார்ச் 31, 2026-க்குள் முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதை நோக்கிய அரசின் செயல்பாடுகள், வெற்றிகரமாக உள்ளன. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் வரை சத்தீஸ்கரின் பீஜப்பூர், கான்கர், நாராயண்பூர், சுக்மா, ஜார்க்கண்ட்டின் மேற்கு சிங்பூம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி ஆகிய 6 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன. இது தற்போது, சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர், நாராயண்பூர், சுக்மா ஆகிய மூன்று மாவட்டங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதேபோல், மாவோயிஸத்தால் பாதிக்கப்பட்ட (affected by Maoism) மாவட்டங்களின் வகைப்பாட்டில் இருந்த 18 மாவட்டங்கள், தற்போது 11 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இடதுசாரி தீவிரவாதிகள் 312 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 1,639 பேர் சரணடைந்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT