Published : 15 Oct 2025 12:32 AM
Last Updated : 15 Oct 2025 12:32 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்ததில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனை பரிந்துரை செய்தவற்கு கமிஷனாக மருத்துவருக்கு பாட்டிலுக்கு 10 சதவீத கமிஷன் வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக இருமல் மருந்தை பரிந்துரை செய்ததில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாரசியா அரசு சுகாதார மையத்தில் பணிபுரியும் குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார்.
4 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக இந்த மருந்தை பரிந்துரை செய்வதற்கு தடை இருந்தபோதிலும் கமிஷனுக்காக குழந்தைகளுக்கு இந்த மருந்தை எழுதிக்கொடுத்துள்ளார். அவர் பரிந்துரைத்த கோல்டிரிப் இருமல் மருந்தின் விலை ரூ.24.54-ஆக இருந்த நிலையில் 10 சதவீத கமிஷன் தொகை அதாவது ரூ.2.54-ஐ ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் அந்த மருத்துவருக்கு வழங்கியுள்ளது.
மீண்டும், மீண்டும் பரிந்துரை: கோல்டிரிப் சிரப்பில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த டைஎதிலீன் கிளைகோல் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் என்ற அபாயத்தை மருத்துவர் பிரவீன் சோனி அறிந்திருந்தும் மீண்டும், மீண்டும் அந்த மருந்தை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
ஆனால், மருத்துவர் பிரவீன் சோனியின் மீது நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டை அவரது வழக்கறிஞர் பவன் சுக்லா மறுத்துள்ளார். இது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு, அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT