Published : 11 Oct 2025 08:32 AM
Last Updated : 11 Oct 2025 08:32 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவை உ.பி. அரசு சார்பில் அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத்
பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதில், 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முலம் கடந்த ஆண்டின் (26 லட்சம் அகல் விளக்குகள்) சாதனை முறியடிக்கப்பட உள்ளது. இவ்விளக்குகள் சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்கள் மற்றும் குடியிருப்புகளில் ஒளிர உள்ளன. தீபாவளிக்கு தமிழகத்தில் நரகாசுரன் காரணமானதைப் போல், உ.பி.யில் ராமர் போருக்குப் பின் அயோத்தி திரும்பியதன்
நினைவாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் 1,100 டிரோன்கள் வானில் தீபாவளிக்காக பறக்கவிடப்பட உள்ளன. இவற்றில் ராமாயணத்தின் காட்சிகள் ஒளிப்படங்களாக சித்தரிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கூறும்போது, “அயோத்தியின் வெறும் தீபாவளி திருநாள் விழாவாக அன்றி ஆன்மிகம், நம்பிக்கை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் மெகா விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடமும் தீபாவளிக்கு வரும் வெளிநாட்டவர்கள் இடையே இது சர்வதேச அளவில் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும். இதைக் காண வரும் லட்சக்கணக்காக பொதுமக்களுக்காக அயோத்தியில் சிறப்பு போக்குவரத்துடன் பாதுகாப்புகளும் பலப்படுத்த உள்ளன” என்றார்.
அயோத்தியின் தீபாவளி நிகழ்ச்சிக்காக உ.பி. அரசு வழக்கம் போல், தன்னார்வலர்கள் உதவியைப் பெற முடிவு செய்துள்ளது. இப்பணிக்கு வர விரும்புபவர்கள் மாநில அரசின் இணையதளத்தில் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம். இதில் தமிழ்நாட்டிலிருந்தும் பலர் தன்னார்வலர்களாகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.
ராமர் கோயிலில் முஸ்லிம் தம்பதி: அயோத்தியின் ராமர் கோயிலில் இந்து அல்லாத இதர மதத்தினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்கள் பூசைக்கான கருவறை தவிர இதர இடங்களைப் பார்வையிடலாம். நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்த துறவிகளின் சிலைகள் நிகழ்ச்சிக்குப் பின் ஒரு முஸ்லிம் தம்பதியும் பங்கேற்றனர். அயோத்தியின் அண்டை மாவட்டமான அம்பேத்கர் நகரிலிருந்து ஷேர் அலியும் அவரது மனைவி சாய்ரா பானுவும் வந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் இந்த முஸ்லிம் தம்பதி சுமார் 20 நிமிடங்கள் ராமர் கோயிலை சுற்றிப் பார்த்தனர். இது மதநல்லிணைக்கத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகப் பாராட்டப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT