Published : 11 Oct 2025 12:37 AM
Last Updated : 11 Oct 2025 12:37 AM
திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழுவினர் (எஸ்ஐடி) தாக்கல் செய்யவேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளுக்கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சூழலில் துவார பாலகர் சிலைகளின் பீடங்களை காணவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இதையடுத்து, செப்பனிடும் பணிகளுக்கான பொறுப்பை ஏற்ற பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் கேரள உயா் நீதிமன்ற உத்தரவின்படி 2 நாள்கள் விசாரணை நடத்தி திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பிறகு சபரிமலையில் உள்ள பொருள்களையும் மதிப்பீடு செய்ய உயர் நீதிமன்றம் குழு அமைத்தது.
இதனிடையே தங்க முலாம் பூசப்பட்ட பீடத்தை தேடி கண்டுபிடிக்க ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து தேவசம் போர்டு நடத்திய விசாரணையில், தங்க முலாம் பூசப்பட்ட பீடம் மீட்கப்பட்டது. உயர் நீதிமன்ற விசாரணையில் துவார பாலகர் சிலைகளின் மேல் பூசப்பட்டிருந்த தங்க முலாம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மொத்தம் 4 கிலோ தங்கம் மாயமாகி இருக்கிறது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு(எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: சிறப்பு விசாரணைக் குழுவினர், தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி அடுத்த 6 வாரங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், துவாரபாலகர்கள் சிலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT