Published : 09 Oct 2025 07:34 AM
Last Updated : 09 Oct 2025 07:34 AM
பெங்களூரு: கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோபர் 18ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் கூறியதாவது: கர்நாடகாவில் சமூக,கல்வி,பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
கொப்பல் மாவட்டத்தில் 97 சதவீதமும், உடுப்பி 63 சதவீதமும், தட்சிண கன்னட மாவட்டத்தில் 60 சதவீதமும் மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதம் கணக்கெடுப்பு முடிக்கும் வகையில் அக்டோபர் 17ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் 1.2 லட்சம் ஆசிரியர்கள், 40 ஆயிரம் இதர பணியாளர்கள் என ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் ஆசிரியர்கள் முழுமையான ஈடுபடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 18ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
கணக்கெடுப்புப் பணியின் போது உயிரிழந்த 3 ஊழியர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த பணியில் பங்கேற்காத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT