Published : 07 Oct 2025 06:39 AM
Last Updated : 07 Oct 2025 06:39 AM
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணைக்காக நேற்று கூடியது. அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை நோக்கி வீசி உள்ளார்.
ஆனால் அது அவர் மீது படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். பின்னர் அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை தடைபட்டது. இதனிடையே, ‘‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை சகித்துக் கொள்ள முடியாது’’ என கிஷோர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதி கவாய் கூறும்போது, “இதனால் கவனத்தை சிதற விடாதீர்கள். இவை என்னை பாதிக்கவில்லை’’ என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள விஷ்ணு சிலையை மறுநிர்மாணம் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்ததது. அப்போது, தலைமை நீதிபதி கூறும்போது, “சிலை மறுநிர்மாணம் பற்றி அந்த தெய்வத்திடமே கேளுங்கள்’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
பிரதமர் மோடி கண்டனம்: பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது நடந்த தாக்குதல் இந்தியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது’’ என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT