Published : 07 Oct 2025 06:35 AM
Last Updated : 07 Oct 2025 06:35 AM
இருமல் மருந்து சாப்பிட்ட 16 குழந்தைகள் உயிழந்துள்ளனர். இதையடுத்து அந்த மருந்து விற்பனைக்கு 9 மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக முதல் குழந்தை உயிரிழந்தது. ஆனால், அடுத்த 15 நாட்களுக்குள் 5 வயதுகுட்பட்ட ஆறு குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தன.
சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் இருமல் சிரப் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அந்த மருந்தை எடுத்துக்கொண்ட பின்பு சில நாட்களுக்குள் அந்த குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. இதையடுத்து, அவர்களுக்கு சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்கிய சில நாட்களுக்குள் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர்.
உயிரிழந்த குழந்தைகளில் சிலர் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பின்னர் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், குழந்தைகளின் சிறுநீரகங்களில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. இது, விஷத்துடன் தொடர்புடைய ஒரு வகை நச்சு ரசாயனமாகும். விசாரணையில் அந்த குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் மற்றும் நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் சிரப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த கோல்ட்ரிப் என்ற இருமல் சிரப்பை அக்டோபர் 2-ம் தேதி, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிசோதித்ததில் அந்த மாதிரியில் கலப்படம் இருப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT