Published : 03 Oct 2025 06:54 AM
Last Updated : 03 Oct 2025 06:54 AM
புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு (சிசிஇஏ) கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “நாட்டின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக 57 கேந்திர வித்யாலயா பள்ளிகளை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 86,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைவார்கள். மேலும் இதனால் 4,600-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உருவாகும். இதற்காக 9 ஆண்டுகளில் சுமார் ரூ.5,863 கோடி ஒதுக்கப்படும். இதில் ரூ.2,586 கோடி மூலதனச் செலவாகவும் ரூ.3,277 கோடி செயல்பாட்டுச் செலவாகவும் இருக்கும்” என்றார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “57 புதிய கே.வி. பள்ளிகளை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு அடிப்படை நிலையில் கல்வி அளிக்கும் பால்வதிகாக்களை இது உள்ளடக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைவார்கள், பல வேலைவாய்ப்புகளும் உருவாகும். இவை, குறிப்பாக லட்சிய மாவட்டங்கள், வடகிழக்கு மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT