Published : 02 Oct 2025 01:36 PM
Last Updated : 02 Oct 2025 01:36 PM
கண்ணூர்: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். மேலும், இஸ்ரேலில் உள்ள யூதர்களும், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இரட்டை சகோதரர்கள் என அவர் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
கண்ணூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பினராயி விஜயன், "இஸ்ரேலில் உள்ள யூதர்களும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸும் இரட்டை சகோதரர்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பணிவான ஊழியர். ட்ரம்ப் நிர்வாகம் இந்திய குடிமக்களை கைவிலங்குகள் போட்டு கொண்டு வந்தபோது அல்லது விசா கட்டணங்களை அதிகரித்தபோது மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதே ஒரு சுயமரியாதை கொண்ட தேசமாக இருந்தால், ரத்தம் ஓடும். ஆனால் பணிவான ஊழியர்களாக மாறும் ஆட்சியாளர்களை நாம் கொண்டிருக்கிறோம்.” என்றார்
முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்துடன் நினைவுகூர்வது நமது அரசியலமைப்பிற்கு எதிரான மிகப்பெரிய அவமானமாகும். சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி, காலனித்துவ ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டு ஒரு பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை ஊக்குவித்த ஓர் அமைப்பை இது நியாயப்படுத்துகிறது. இந்த தேசிய மரியாதை நமது உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்கள் கற்பனை செய்த மதச்சார்பற்ற, ஒருங்கிணைந்த இந்தியாவின் நினைவின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT