Published : 30 Sep 2025 09:28 AM
Last Updated : 30 Sep 2025 09:28 AM
முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்குழு அமைப்பின்(ஏஏசி) சார்பாக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை அரசு குவித்துள்ளது. மேலும், அங்கு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ஏஏசி அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 38 அம்ச கோரிக்கை, அடிப்படைக் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை வலியுறுத்தி ஏஏசி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கியப் பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.
ஏஏசி அமைப்பினர் நடத்திய போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது. முசாபராபாத் நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின்போது சில போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த போலீஸார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தித் சேனல்கள் தெரிவிக்கின்றன. போலீஸார் சுட்டதால்தான் 2 பேர் உயிரிழந்ததாக, போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
முக்கியத் தலைவர்: இதுகுறித்து அவாமி செயற்குழுவின் முக்கிய தலைவராக விளங்கும் சவுகத் நவாஸ் மிர், முசாபராபாத்தில் மக்களிடையே கூறும்போது, ‘‘எங்கள் போராட்டம் எந்தவொரு அமைப்புக்கும் எதிரானது அல்ல. ஆனால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைத் தரவேண்டி இதை நடத்துகிறோம். எங்களுக்கு தேவையானவற்றை அரசு வழங்கவேண்டும். இல்லாவிட்டால், இங்கு வசிக்கும் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளத் தயாராக அரசு இருக்கவேண்டும்’’ என்றார்.
போராட்டத்தைத் தடுப்பதற்காக பாகிஸ்தான் அரசு நகரங்களின் முக்கிய சந்திப்புகளை மூடியுள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் பதற்றமான பகுதிகளில் போலீஸாரும், ராணுவத்தினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனிடையே, ஏஏசி போராட்டக்குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT