Published : 27 Sep 2025 02:26 PM
Last Updated : 27 Sep 2025 02:26 PM
ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இனி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கப்பெறும்.
மேலும், புதிய 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 92,600 கோபுரங்கள் உட்பட, பிஎஸ்என்எல் அமைத்த 97,500 க்கும் மேற்பட்ட 4ஜி செல்போன் கோபுரங்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.37,000 கோடி செலவில் நிறுவப்பட்ட இந்த செல்போன் கோபுரங்கள், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த செல்போன் கோபுரங்கள் சோலார் மின்சாரம் மூலமாக இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதிலும், கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் சேவையை சிறப்பாக வழங்கவும் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை முக்கிய பங்களிப்பை வழங்கும். இதன் மூலமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் புதிய சந்தாதாரர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் எனவும் தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் இதுவரை இணைய இணைப்பு கிடைக்காத 26,700-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 4ஜி சேவை மூலமாக இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதில் ஒடிசாவில் 2,472 கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படவுள்ளது. அவற்றில் பல தொலைதூரங்களிலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அமைந்துள்ளன.
4ஜி நெட்வொர்க் சேவையை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி, “வரவிருக்கும் ஆண்டுகளில் ஒடிசா செழிப்பாக மேம்படும். வளங்கள் நிறைந்த ஒடிசா மாநிலம் இனி பின்தங்கியிருக்காது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT