Published : 26 Sep 2025 07:54 AM
Last Updated : 26 Sep 2025 07:54 AM
சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் நேற்று போலீஸார் முன்பு சரணடைந்தனர். மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. இந்நிலையில், மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் தீவிரவாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒழிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை துறந்து சரணடைய வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு நிதியுதவியுடன் வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளன.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா நகரில், மாநில காவல் துறை தலைவர் அனுராக் குப்தா, மேற்கு சிங்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் ரேணு மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை துறந்து நேற்று சரணடைந்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், வெடிபொருட்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சரணடைந்து வருகின்றனர். இதனால், மாநிலத்தில் குறிப்பாக மேற்கு சிங்பும் மாவட்டத்தில் அந்த அமைப்பு பலவீனமடையும். கடந்த 2022-க்கு பிறகு மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடந்த 9,631 சோதனையின்போது 10 பேர் உயிரிழந்தனர். 175 பேர் கைது செய்யப்பட்டனர்” என்றார். சரணடைந்தவர்களில் ராந்தோ போய்பாய் (எ) கிரந்தி போய்பாய், சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பின் கிழக்கு பிராந்தியத்தின் முக்கிய நிர்வாகி ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT