Published : 26 Sep 2025 12:30 AM
Last Updated : 26 Sep 2025 12:30 AM

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தேர்வு

புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி கடந்த 2019-ல் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த பதவிக்கு டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். பின்னர், 2022-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் டி.ராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 3-வது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை, நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற வரம்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விதியில் இருந்து டி.ராஜாவுக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 76 வயது ஆகும் நிலையிலும், பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்ட ஒரே உறுப்பினர் டி.ராஜா ஆவார்.

பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இண்டியா கூட்டணி தலைவர்களுடன் வலுவான உறவை கொண்டிருக்கும் டி.ராஜா, தலைமைப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என பிஹார் மாநில கட்சித் தலைமை வாதிட்டது. தொடக்கத்தில் இப்பதவிக்கு கேரளாவின் பினோய் விஸ்வம் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவர் மாநில அரசியலில் நீடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர் டி.ராஜா. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2007 மற்றும் 2013-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x