Published : 25 Sep 2025 05:08 PM
Last Updated : 25 Sep 2025 05:08 PM
புதுடெல்லி: லடாக்கில் ஏற்பட்ட வன்முறையால் விலைமதிப்பில்லாத 4 உயிர்கள் பறிபோனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக வெளியீட்டுப் பிரிவு தலைவர் பவன் கெரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், லடாக்கில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது துயரகரமானது. அரசின் தோல்வியடைந்த வாக்குறுதிகளை இது நினைவூட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம், அமைதிக்கு வழி வகுக்கும் என கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பதில், மத்திய அரசின் குறுகிய பார்வை ஜம்மு மற்றும் லடாக்கை வன்முறை நெருப்பில் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடி பாஜக அரசு உருவாக்கியது. ஆனால், தற்போது பாஜக மக்களின் கோரிக்கைகளை நியாயமற்ற முறையில் புறக்கணிக்க முயல்கிறது.
தங்களின் கண்ணியம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்க லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற அம்மக்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. இரக்கத்துடனும் அரசியல் சாதுர்யத்துடனும் அது அணுகப்பட வேண்டும். மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.
பின்னணி: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் நேற்று லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசிய அவர்கள், சிஆர்பிஎப் வேன் உட்பட பல வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டினர். மேலும் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லே மாவட்டத்தில் 5 மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஒன்று கூடவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம் காரணமாக பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார். “இது இளைஞர்களின் கோபம், புரட்சி.
வன்முறையை லடாக் இளைஞர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது நமது நோக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும், நிலைமையை மேலும் மோசமாக்கும். லடாக்கிலும் நாட்டிலும் ஸ்திரமின்மையை நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் கூறினார். கோரிக்கை தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு லடாக் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ள நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT