Published : 25 Sep 2025 09:12 AM
Last Updated : 25 Sep 2025 09:12 AM
லே: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக லடாக் மக்கள் தங்கள் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் நிலம், கலாச்சாரம் மற்றும் வளங்களை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசன பாதுகாப்பும் கோரி வருகின்றனர்.
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் நேற்று லே நகரில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்குள்ள லடாக் மலைப்பகுதி மேம்பாட்டு தன்னாட்சி கவுன்சில் அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் போலீஸார் மீது கற்களை வீசிய அவர்கள், சிஆர்பிஎப் வேன் உட்பட பல வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை விரட்டினர். மேலும் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லே மாவட்டத்தில் 5 மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஒன்று கூடவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம் காரணமாக பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
“இது இளைஞர்களின் கோபம், புரட்சி. வன்முறையை லடாக் இளைஞர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது நமது நோக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும், நிலைமையை மேலும் மோசமாக்கும். லடாக்கிலும் நாட்டிலும் ஸ்திரமின்மையை நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் லடாக் போராட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் பன்ட்சாக் ஸ்டான்சின் செபாக் வன்முறையை தூண்டியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை சோனம் வாங்சுக் மறுத்துள்ளார். லடாக்கில் மாநில அந்தஸ்து கோரும் போராட்டத்தில் முதல்முறையாக கலவரம் வெடித்துள்ளது. கோரிக்கை தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு லடாக் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்துள்ள நிலையில் அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT